Published : 28 Dec 2020 06:03 PM
Last Updated : 28 Dec 2020 06:03 PM

மதுபோதையில் கார் ஓட்டி சிக்கிய கோபம்; போலீஸ் ரோந்து வாகனத்தைக் கடத்திச் சென்ற டாக்டர் கைது: கார் சேஸிங்கில் ஆட்டோ மீது மோதி விபத்து

சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிச் சிக்கிய தோல் சிகிச்சை மருத்துவர் ஒருவர், அவரது வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் ஆத்திரத்தில் போலீஸின் ரோந்து வாகனத்தைக் கடத்திச் சென்றார். பெருமுயற்சிக்குப் பின் அவரைத் துரத்திச் சென்று போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

அரக்கோணம், சால்பேட்டையைச் சேர்ந்தவர் முத்து விக்னேஷ் (31). எம்பிபிஎஸ், எம்.டி படித்த மருத்துவரான இவர் தோல் சிகிச்சை நிபுணராக குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு நண்பர்களுடன் விருந்தில் கலந்துகொண்டு மது அருந்தியுள்ளார்.

பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் தனது காரில் சேத்துப்பட்டு வழியாக கீழ்ப்பாக்கம் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை அருகே போக்குவரத்து போலீஸார் அவரது காரை மடக்கியுள்ளனர். போக்குவரத்து உதவி ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீஸார் அவரது ஆவணங்களை சோதித்து, பின் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தாரா என சோதித்தபோது மது அருந்தியிருப்பதை உறுதி செய்தனர்.

உடனடியாக அவர் வாகனம் ஓட்டத் தகுதியில்லை என்பதை விளக்கி வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், அபராதப் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறினர். அவர் தொடர்ந்து தான் மருத்துவர் என்பதை வலியுறுத்தி, தனது வாகனத்தை ஒப்படைக்கும்படி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

போலீஸார் வாகனத்தைத் தர மறுத்து அனுப்பிவிட்டனர். பின்னர் அவர் சென்றுவிட்டார். அதன்பின் இரவு 2 மணி அளவில் கீழ்ப்பாக்கம் சிக்னல் அருகே சாலையில் போக்குவரத்துக் குறியீடுகளை பெயிண்ட் மூலம் வரையும் பணியில் உதவி ஆய்வாளர் சிவசங்கரன், ரோந்து வாகன ஓட்டுநர் ஞானவேல் இருவரும் ஈடுபட்டிருந்தனர்.

அதிகாலை 3.45 மணி அளவில் அங்கு மீண்டும் வந்த மருத்துவர் முத்து விக்னேஷ் அங்கு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா போக்குவரத்து ரோந்து வாகனத்தைப் பார்த்துள்ளார். வேலை மும்முரத்தில் இருந்த சிவசங்கரனும், வாகன ஓட்டுநர் ஞானவேலும் அவரைக் கவனிக்கவில்லை. தனது வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாரைப் பழிவாங்க நினைத்த டாக்டர் முத்து விக்னேஷ் போலீஸாரின் ரோந்து வாகனம் சாவியுடன் இருப்பதைப் பார்த்து அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்து வேகமாக ஓட்டிச் சென்றார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தில் ஏறி ரோந்து வாகனத்தைத் துரத்திச் சென்றனர். போலீஸார் துரத்துவதைப் பார்த்த டாக்டர், காரை வேகமாக ஓட்டிச் சென்றார். கீழ்ப்பாக்கம் சங்கம் திரையரங்கைக் கடந்து எழும்பூர் நோக்கி கார் வேகமாகச் சென்றபோது, எழும்பூர் கெங்கு ரெட்டி பாலம் அருகே எதிரில் வந்த ஆட்டோ மீது மோதியது.

இதையடுத்து காரை மடக்கிய போலீஸார் காரிலிருந்த முத்து விக்னேஷைப் பிடித்துக் கைது செய்தனர். ஆட்டோவில் வந்த 2 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மதுபோதையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் போலீஸ் ரோந்து வாகனத்தையே கடத்திய டாக்டர் முத்து விக்னேஷ் மீது வாகனத்தைக் கடத்தியது, மிரட்டல் விடுத்தது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, தாறுமாறாக வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.

ரோந்து வாகனத்தைக் கடத்தியது, போலீஸாரை மிரட்டியது, தரக்குறைவாகப் பேசியது, அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது போன்ற குற்றங்களுக்காக கீழ்ப்பாக்கம் போலீஸார், டாக்டர் முத்து விக்னேஷைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

சமூகத்தில் அந்தஸ்துடனும் மதிப்புடனும் வாழும் வகையில் உயர்கல்வி படித்து பணியில் இருந்த டாக்டர், மது போதையால் சட்டத்தை மீறியதால் கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x