Published : 24 Dec 2020 10:09 PM
Last Updated : 24 Dec 2020 10:09 PM

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70.

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் பேராசிரியர் தொ.பரமசிவன் தவிர்க்க முடியாத பெயர். நாட்டார் வழக்காறு சார்ந்த பார்வையில் புது வெளிச்சம் பாய்ச்சியவர். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்தவை இவரது ஆய்வுகள். ‘திராவிடம்’ எனும் சிந்தனை எப்படித் தமிழ் மண்ணில் உருக்கொண்டது, அதற்கான வரலாற்று – பண்பாட்டுப் பின்னணி என்ன என்று தர்க்கபூர்வமாக நிலைநாட்டியவர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950ஆம் ஆண்டு பிறந்த தொ.பரமசிவன், செயின்ட் சேவியர் கல்லூரியிலும், காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும் தமிழ் பயின்றார். தமிழ்ப் பேராசிரியராகப் பணி வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரியிலும், மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் பணியாற்றினார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக 9 ஆண்டுகள் பணியாற்றினார்.

சிறுவயதில் தன் தாய் லட்சுமி அம்மாளிடம் பல வாழ்க்கைச் சம்பவங்களைக் கதைகளாகக் கேட்டதுதான் தனது பிற்காலப் பேச்சுவழி ஆய்வுகளுக்குக் காரணமாக இருப்பதாகத் தெரிவித்தார். வரலாறு என்பது காலந்தோறும் மேட்டிமைச் சமுதாயங்களின் பார்வையிலிருந்தே பதிவுசெய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் போக்கிலிருந்து மாறுபட்டு, புறக்கணிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு தன் ஆய்வுகளை மேற்கொண்டவர். இதற்காக இவருடைய கருத்தியல் தளத்தை மனித வாசிப்பு சார்ந்து அமைத்துக்கொண்டார்.

‘அறியப்படாத தமிழகம்’, ‘அழகர் கோயில்’, ‘பண்பாட்டு அசைவுகள்’ போன்ற இவரது நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றவை. ‘வழித்தடங்கள்’, ‘சமயங்களின் அரசியல்’, ‘விடுபூக்கள்’, ‘உரைகல்’, ‘மானுட வாசிப்பு’, ‘மஞ்சள் மகிமை’, ‘மரபும் புதுமையும்’ உள்ளிட்ட பல நூல்களை தொ.பரமசிவன் எழுதியுள்ளார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று இரவு சுமார் 8 மணி அளவில் உயிரிழந்தார்.

தொ.பரமசிவன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விசிக பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ரவிக்குமார், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x