Published : 16 Oct 2015 07:45 AM
Last Updated : 16 Oct 2015 07:45 AM

வீடு தேடி வரும் ஏமாற்றும் கும்பல்: ‘இண்டேன்’ காஸ் நிறுவன பெயரில் நூதன மோசடி - விழிப்புடன் இருக்க அதிகாரி வேண்டுகோள்

‘இண்டேன் காஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, வீட்டில் இருப்பவர்களிடம் ஒரு கும்பல் பண மோசடி செய்து வருவது அம்பலமாகியுள்ளது. இந்த கும்பலிடம் ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீடு வீடாக சென்று சின்னச் சின்ன பொருட்களை விற்பனை செய்யும் சில நிறுவனங்கள், பொதுமக்களை எளிதாக ஏமாற்ற புதுயுக்தியை கடைபிடிப்பது வழக்கம். அதேபோல, குறுக்கு வழியில் பணம் பறிக்க முயலும் சில கும்பல்கள், அவ்வப்போது பல நூதன முறைகளை கையாண்டு வருகின்றன. அந்த வகையில் இப்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்கான பொருட்கள் விற் பனை செய்யும் சிலர், ‘மானியம்’ என்ற வார்த்தையை வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்து உள்ளனர்.

இந்த கும்பலைச் சேர்ந்த பெண் கள் 3 அல்லது 4 பேர் வீடு வீடாக சென்று, ‘‘நாங்கள் இண்டேன் சமை யல் எரிவாயு சிலிண்டர் நிறுவனத் தில் இருந்து வருகிறோம். எங்க ளிடம் 2 பொருட்கள் உள்ளன. அதில் ஒன்றை சிலிண்டர் ரெகுலேட்டர் அருகே டியூப்பிலும், மற்றொன்றை பர்னர் மேல் பகுதியிலும் மாட்ட வேண்டும். இதனால் கூடுதல் வெப்பம் கிடைப்பதால், சமையல் எரி வாயு சிலிண்டரை கூடுதலாக 15 முதல் 25 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

வங்கி கணக்கில் பணம்

இந்த பொருட்களின் விலை ரூ.3,500. எங்களிடம் பணம் கொடுத்து பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். இதை மத்திய அரசு மானியமாக உங்களுக்கு திருப்பிக் கொடுத்துவிடும். சிலிண் டர் மானியத்தைப்போல இந்த தொகையும் உங்கள் வங்கி கணக் கில் ஒரு மாதத்தில் சேர்ந்து விடும்’’ என்று நம்பிக்கை ஏற்படுத்து வதுபோல பேசி, பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

ஆனால், ரூ.3,500 கொடுத்து பொருட்களை வாங்கியவர்களில் ஒருவருக்குகூட வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை. இதுகுறித்து சமையல் எரிவாயு நிறுவனத்தில் சென்று கேட்டபோது, அப்படி ஒரு திட்டமே மத்திய அரசிடம் இல்லை என்று கூறியுள்ளனர். அதன்பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த கும்பல் மோசடி செய்து வருகிறது.

போலீஸில் புகார் செய்யலாம்

இதேபோல இண்டேன் பெயரை சொல்லிக்கொண்டு, மானியம் கொடுப்பதாக கூறி பொருட்களை விற்பனை செய்ய யாராவது வந்தால் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு எண் 100-க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துவிடுங்கள்.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன துணை இயக்குநர் சவீதா கூறும்போது, ‘‘நுகர்வோருக்கு சிலிண்டர் விலைக்கான மானியத்தைத் தவிர வேறு எந்த மானியமும் மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. இண்டேன் நிறுவனம் எந்த பொருளையும் வீட்டுக்கு நேரடியாக வந்து விற்பனை செய்வதில்லை. இண்டேன் பெயரை சொல்லி யார் வந்தாலும் தீர விசாரித்த பிறகே வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். மோசடி செய்பவர்கள் எந்த வடிவிலும் வருவார்கள். நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x