Published : 23 Oct 2015 05:28 PM
Last Updated : 23 Oct 2015 05:28 PM
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பலர் உயிரிழந்துள்ளனர். சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால் உயிரிழப்புகளை தடுக்க முடியும். கொசுக்களை அழித்தால் டெங்கு காய்ச்சலை ஒழித்து விட முடியும்.
மாதத்துக்கு 90 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி சொல்கிறது. ஆனால், ஒரு மருத்துவமனையில் மட்டுமே 200 பேர் டெங்குவுக்காக சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதிலேயே மாநகராட்சி குறியாக இருக்கிறது.
டெங்கு வேகமாகப் பரவி வருவதை கருத்தில் கொண்டு கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு பரிசோதனை, சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிய நிலையில் உள்ள டெங்கு நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற முடியும். இதனை மாற்றி ஆரம்ப நிலையில் உள்ள டெங்கு நோயாளிகளும் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT