Published : 20 Dec 2020 05:16 PM
Last Updated : 20 Dec 2020 05:16 PM

அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று (டிச.20) வெளியிட்டுள்ள தகவல்:

"வடகிழக்குப் பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதி, மதுக்கூர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், டிச. 20, 21ஆம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும், பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் டிச. 22ஆம் தேதி மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x