Last Updated : 19 Dec, 2020 07:07 PM

 

Published : 19 Dec 2020 07:07 PM
Last Updated : 19 Dec 2020 07:07 PM

ரேஷன்கடைகளில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சர்வர் பிரச்சினை: கைரேகை பதிவாகாததால் பல மணி நேரம் காத்திருக்கும் அட்டைதாரர்கள்

ரேஷன்கடைகளில் மீண்டும் சர்வர் பிரச்சினையால் கைரேகை பதிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பல மணி நேரம் காத்திருந்து பொருட்கள் வாங்கும்நிலை உள்ளது.

தமிழகத்தில் அக்.1-ம் தேதி ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் முறைகேடுகளை தடுக்கவும், சரியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யவும், மானிய ஒதுக்கீட்டை கணக்கிடவும் கைரேகை முறை அமல்படுத்தப்பட்டது.

இதில் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே கைரேகை வைத்து பொருட்களைப் பெற முடியும். இதற்காக ரேஷன் கடைகளுக்கு கைரேகை பதிவு வசதியுள்ள 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் வழங்கப்பட்டன. ஆனால் சர்வர் பிரச்சினையால் தமிழகத்தில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து பழைய முறைப்படி ரேஷன்கார்டை 'ஸ்கேன்' செய்து பொருட்கள் வழங்கலாம் என அக்டோபர் மாத இறுதியில் விற்பனையாளர்களுக்கு உணவு வழங்கல்துறை உத்தரவிட்டது. தற்போது ‘சர்வர்’ மேம்படுத்தப்பட்டதாக கூறி டிச.16-ம் தேதி முதல் மீண்டும் கைரேகை பெற்று பொருட்களை வழங்குமாறு விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் சர்வர் பிரச்சினை தொடர்வதால் கைரேகை பதிவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒரு கடையில் நாள் ஒன்றுக்கு 20 பேரது கைரேகையை பதிவு செய்வதே சிக்கலாக உள்ளது.

இதனால் அட்டைதாரர்கள் பல மணி நேரம் காத்திருந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும் பலர் பொருட்கள் வாங்காமலேயே சென்றுவிடுகின்றனர்.

‘சர்வர்’ பிரச்சினை தீரும் வரை மீண்டும் பழைய முறையிலேயே பொருட்கள் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x