Published : 17 Dec 2020 06:32 PM
Last Updated : 17 Dec 2020 06:32 PM

மருத்துவக் குழுவினரின் அறிவுரை ஏற்பு: உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் முருகன்

மனைவி நளினி, உறவினர்களிடம் வீடியோ அழைப்பில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த முருகன், மருத்துவக் குழுவினரின் அறிவுரையை ஏற்று இன்று உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் என்ற ஸ்ரீகரன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கரோனா ஊரடங்கு காலத்தில் சிறைவாசிகளை உறவினர்கள் சந்தித்துப் பேசிக்கொள்ள அனுமதி அளிக்கவில்லை. மாற்றாக, வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் பேசிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முருகன் நெருங்கிய உறவினர் ஒருவரிடம் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் கடந்த மாதம் குரூப் சாட்டிங் முறையில் வேறு சில உறவினர்களிடம் பேசியுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் முருகன் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சிறை நன்னடத்தை விதிகளை மீறியதாக வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகள் மூலம் முருகன் பேசுவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் வீடியோ அழைப்பில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த மாதம் 23-ம் தேதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்துவந்தார்.

அவரது உடல் நிலையை சிறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவ்வப்போது, முருகனுக்கு குளுக்கோஸ் செலுத்தினர். உண்ணாவிரதம் இருந்துவரும் முருகனின் உடல்நிலை குறித்து வேலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் யாஸ்மின் கடந்த 15-ம் தேதி மாலை ஆய்வு செய்தார். அப்போது, முருகனின் உடல்நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர், காவல் துறையினர் பாதுகாப்புடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகனை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது, முருகனின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தது. இதனால், அவரை மீண்டும் மத்திய சிறைக்குக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். ஆனால், முருகனைச் சிறைக்குள் அனுமதிக்க மறுத்த மத்திய சிறை மருத்துவ அலுவலர் செந்தாமரை கண்ணன், அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி கூறினார். இதையடுத்து, முருகனைக் காவல் துறையினர் மீண்டும் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முருகனிடம் மருத்துவக் குழுவினர் இன்று (டிச.17) காலை பேச்சுவார்த்தை நடத்தினர். அவரது உடல்நிலை குறித்து எடுத்துக் கூறியதுடன் உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கூறினர். இதனை ஏற்று இளநீர் குடித்த முருகன், 25 நாட்களாக இருந்துவந்த உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். தொடர்ந்து, சிகிச்சை பெற்று வரும் முருகன் விரைவில் சிறைக்குத் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x