Published : 17 Dec 2020 03:40 PM
Last Updated : 17 Dec 2020 03:40 PM

இரு தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை வாய்ப்பு; 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (டிச.17) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"குமரிக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கைக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் மணப்பூண்டியில் 17 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையைப் பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களான விழுப்புரம், புதுவை, கடலூர், நாகை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் கடந்த அக்.1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்துள்ள மழையின் அளவு 452 மி.மீ. இந்த காலத்தின் இயல்பு அளவு 419 மி.மீ. இது இயல்பைவிட 8% அதிகம்.

சென்னையைப் பொறுத்தவரையில் வடகிழக்குப் பருவமழையில் இன்று வரை பெய்துள்ள மழையின் அளவு 1,034 மி.மீ. இந்தக் காலத்தின் இயல்பு அளவு 734 மி.மீ. இது இயல்பைவிட 41% அதிகம். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை".

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x