Published : 15 Dec 2020 12:29 PM
Last Updated : 15 Dec 2020 12:29 PM

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கான நிலுவை ரூ.375 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 2019-20-ம் ஆண்டுக்கான நிலுவைத்தொகை ரூ.375.89 கோடி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டதை எதிர்த்தும், 2017-18, 2018-19, 2019-20-ம் கல்வியாண்டுகளில் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21-ம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, 2019-2020-ம் ஆண்டிற்கான நிலுவை தொகையை டிசம்பர் 14-ம் தேதிக்குள் செலுத்த கடைசி வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்த நீதிபதி, அவ்வாறு செலுத்தாத பட்சத்தில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் உரிய அளிக்க வேண்டும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-20-ம் ஆண்டுக்கான செலவுத்தொகையாக 375 கோடியே 89 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு செலுத்துவதற்கான நடைமுறையை தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x