Published : 22 Oct 2015 07:51 AM
Last Updated : 22 Oct 2015 07:51 AM
தமிழக மின் வாரியத்துக்கு ஒரு கோடியே 72 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் உட்பட 2 கோடியே 52 லட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. தினசரி மின் நுகர்வு 27 முதல் 29 கோடி யூனிட்களாக உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெப்பம் அதிகரித்த நிலையில் மின் நுகர்வு 30 கோடியே 30 லட்சமாக அதிகரித் தது. மின் தேவைக்கேற்ப தற்போது தமிழகத்தின் மின் நிறுவு திறனும் 13 ஆயிரத்து 940 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதில், மத்திய அரசின் ஒதுக்கீடான 5 ஆயிரத்து 518 மெகாவாட்டும் அடக்கம்.
தற்போதைய நிலவரப்படி, கூடங் குளம் அணுமின் நிலைய முதல் அலகில் மீண்டும் உற்பத்தி தொடங் கப்படாததால் தமிழகத்துக்கான 563 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வில்லை. மேலும் சில அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறை வால், 5 ஆயிரத்து 518 மெகாவாட் டில், 3 ஆயிரத்து 700 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.
தமிழக அனல் மின் நிலையங்களில் இருந்து 4 ஆயிரத்து 660 மெகாவாட்டில், 3 ஆயிரத்து 900 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையில் காற்றாலை மின்சாரம் மூலம் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது. ஆனால் தற்போது காற்றாலை மின் உற்பத்தி 50 மெகாவாட்டுக்கும் கீழ் குறைந்துவிட்டது. இதனால், மின்தடை மீண்டும் அமலாகுமோ என்ற நிலை ஏற்பட்டது.
இது குறித்து எரிசக்தித் துறை அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழகத்தில் மின் நிறுவு திறன் அதிகரித்த போதிலும், மழை போதிய அளவு இல்லாததால், நீர் மின் நிலையங்களை நம்ப முடியாது. அனல் மின் நிலையங்கள், மத்திய அரசு ஒதுக்கீட்டை கொண்டு மட்டும் மின் தேவையை நிறைவு செய்ய முடியாது. வட மாநிலங்களைச் சேர்ந்த டி.பி.பவர், ஜிண்டால் பவர், பால்கோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் தமிழக மின்வாரியம் 3 ஆயிரத்து 330 மெகாவாட் மின்சாரத்துக்கு நீண்ட கால ஒப்பந்தம் போட்டது. இதில் 2 ஆயிரத்து 158 மெகாவாட் மின்சாரம் தென் மண்டல தொடரமைப் புக்கு வெளியில் இருந்து கொண்டுவரப்பட வேண்டும்.
கடந்தாண்டு சோலாப்பூர்- ரெய்ச்சூர் தொடரமைப்பு தென்மண்டல கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரத்து 200 மெகாவாட் கிடைத்தது. இது தவிர கடந்த ஆகஸ்ட் மாதம் அவுரங்காபாத்- சோலாப்பூர் தொடரமைப்பும் இணைக்கப்பட்டதால் கூடுதலாக 400 மெகாவாட் தனியார் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கிறது.
இது தவிர, தென் மண்டல கட்டமைப்பு மற்றும் தமிழகத்தின் தூத்துக்குடி, கடலூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் என, 2600 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரம் ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கிறது.
கட்டமைப்பு இணைப்பால் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு தற்போதைய மின் தேவை சமாளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT