Last Updated : 11 Dec, 2020 04:20 PM

 

Published : 11 Dec 2020 04:20 PM
Last Updated : 11 Dec 2020 04:20 PM

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.1.17 கோடியில் தீயணைப்பு நிலையம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.1.17 கோடி செலவில் நிரந்தர தீயணைப்பு நிலையம் விரைவில் அமைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஜலால், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2018 பிப்ரவரி 2-ம் தேதி தீ விபத்து நடைபெற்றது. இதில் வீர வசந்த ராய மண்டபத்தின் தூண்கள் மற்றும் கூரைப்பகுதி சேதமடைந்தது.

அப்பகுதி தற்போது வரை சீரமைக்கப்பட வில்லை. இந்த தீ விபத்தை தொடர்ந்து மேற்கு சித்திரை வீதியில் கோவிலின் வாகனம் நிறுத்தும் பகுதியில் தற்காலிக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இங்கு தீயணைப்பு வீரர்கள் அமரக்கூட போதுமான இட வசதியில்லை. எனவே, தற்காலிக தீயணைப்பு நிலையத்தை மீனாட்சி அம்மன் கோவில் அருகே நிரந்தர கட்டிடத்துக்கு மாற்றவும், வீர வசந்தராய மண்டபத்தை விரைவாக சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க ரூ.1.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் தற்போது வேளாண்மை துறை செயல்பட்டு வருகிறது. வேளாண் துறை விரைவில் காலி செய்யப்பட்டு, அந்த இடத்தில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.

கோவில் நிர்வாகம் தரப்பில், தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்த ராய மண்டபத்தை சீரமைக்க நாமக்கல் அருகே கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

அந்த கற்களை கோவிலுக்கு கொண்டு வர போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், எவ்வளவு காலத்திற்குள் மீனாட்சியம்மன் கோவிலுக்கான நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்? என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். வீர வசந்த ராய மண்டபத்துக்கான கற்களை நாமக்கல்லில் இருந்து கொண்டு வர அம்மாவட்ட போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச.18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x