Published : 11 Dec 2020 12:22 PM
Last Updated : 11 Dec 2020 12:22 PM

ரூ.2 கோடி துருக்கி கரன்சி பறிமுதல்: தூத்துக்குடியில் 5 இளைஞர்கள் கைது

கோப்புப்படம்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.2 கோடி மதிப்புள்ள துருக்கி நாட்டு கரன்சிகளுடன் நின்ற 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா தலைமையிலான போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்ற கோவை பேரூர் சரோஜினி நகரைச் சேர்ந்த நாகராஜ் மகன் ஜீவா (23), நெல்லை மாவட்டம் சுரண்டை பாரதியார் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் விஜயமாணிக்கம் (22), கடையநல்லூர் நத்தகர் பள்ளிவாசல் பேட்டையைச் சேர்ந்த செய்யது மகதூம் மகன் முகமது புகாரி (22), அல்லாபிச்சை மகன் முகமது ரிஸ்வான் (20), முகமது கனி மகன் முகமது அஸ்கர் (20) ஆகிய 5 பேரையும் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் துருக்கி நாட்டு கரன்சி நோட்டுகள் 40 எண்ணம் இருந்தன. ஒரு கரன்சியின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.5 லட்சம் ஆகும். இந்த கரன்சி நோட்டுகள் 2006-ம் ஆண்டு அந்நாட்டில் பண மதிப்பிழப்பு (செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது) செய்யப்பட்டுள்ளது. இவற்றை வைத்து மோசடி செய்ய இவர்கள் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x