Last Updated : 09 Dec, 2020 02:15 PM

 

Published : 09 Dec 2020 02:15 PM
Last Updated : 09 Dec 2020 02:15 PM

5 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு: கனிமொழி எம்.பி. உறுதி          

5 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பிரச்சாரப் பயணத்தின் மூலம் எம்.பி.யும், திமுக மாநில மகளிரணிச் செயலாளருமான கனிமொழி தமிழகம் முழுவதும் பொதுமக்களைச் சந்தித்து வருகிறார். இன்று பொள்ளாச்சி அருகே உள்ள வளந்தாயமரம் கிராமத்தில் விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் நீண்ட காலப் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

விவசாயிகள் பேசும்போது, ''பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான ஆனைமலையாறு - நல்லாறு அணைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். திருமூர்த்தி அணையின் 4 லட்சம் ஏக்கர் விவசாயிகளின் நீர்ப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க வல்லுநர் குழு அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் நீர்ப் பாசனத் துறைக்குத் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். தென்னை விவசாயத்தை மேம்படுத்தத் திட்டங்கள் வேண்டும். பொள்ளாச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மரங்களில் ஏற்படும் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இளநீருக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்'' எனக் கோரிக்கைகளை வைத்தனர்.

பின்னர் விவசாயிகளிடம் பேசிய கனிமொழி, ''திமுக ஆட்சி என்றும் விவசாயிகளின் ஆட்சியாக இருந்துள்ளது. திமுக ஆட்சியில்தான் விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்த்த மத்திய அரசின் மின் திட்டத்தை தற்போதைய அதிமுக அரசு ஆதரித்துள்ளது. இது விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம்.

வேளாண் சட்டத்தை எதிர்த்துத் திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ஆதரித்த, பாஜக ஆட்சி செய்யாத மாநிலத்தைச் சேர்ந்த ஒரே முதல்வர் பழனிசாமிதான். வேளாண் சட்டத் திருத்தத்தை ஆதரித்து அதிமுக அரசு விவசாயிகளுக்குத் துரோகம் செய்துள்ளது. விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரே கட்சி திமுக. அதனால்தான் விவசாயிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இந்தச் சட்டத்தினால் அடித்தட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே இந்தச் சட்டத்தை எதிர்த்து திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்.

இங்கு பேசிய விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கேரளாவுக்குச் சென்று கடலில் கலந்து வீணாகும் 8 டிஎம்சி தண்ணீரைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பிஏபி திட்டத்தைப் புதுப்பித்து, புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். தமிழகத்தின் நீர் மேலாண்மை மற்றும் நீர்வளத்தை மேம்படுத்தத் தனியாக நீர்ப்பாசன அமைச்சகம் வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு திட்டங்களுக்கு அதிமுக அரசு நிதி ஒதுக்காததால் மகளிர் சுய உதவித் திட்டங்கள் முடங்கிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 5 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும். விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்'' என்று கனிமொழி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x