காரைக்காலில் கடைகள் அடைப்பு - ஆட்டோக்கள் ஓடவில்லை
காரைக்காலில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன, ஆட்டோக்கள் ஓடவில்லை
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் இன்று நாடு முழுவதும் முழு வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால், கோட்டுச்சேரி, திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மருந்தகம், பால் விற்பனையகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர்த்த மற்ற கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
காரைக்கால் நேரு மார்க்கெட்டில் இறைச்சிக் கடைகள் மட்டும் காலையில் இயங்கின. பெட்ரோல் பங்க்குகள், வங்கிகள், புதுச்சேரி, தமிழக அரசுப் பேருந்துகள் இயங்கின. ஆட்டோக்கள் ஓடவில்லை. முக்கிய கடை வீதிகள், காரைக்கால் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் பெரிதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
காரை பிரதேச விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
