Published : 07 Dec 2020 05:55 PM
Last Updated : 07 Dec 2020 05:55 PM

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை: தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

சென்னை

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இடைக்காலத் தடை கேட்டு தொடர்ந்த வழக்கில், அரசின் அவசரச் சட்டத்துக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த விரக்தியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து கடந்த நவம்பர் 21-ம் தேதி தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது.

இந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல. திறமையை வளர்க்கும் விளையாட்டு என்று 1968ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது” என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், தங்கள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் செலுத்தியும், செலுத்தாமலும் விளையாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படாத நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் மட்டுமே தடை விதிக்கப்பட்டது தவறானது எனவும் வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின் அடிப்படையில், ரம்மி விளையாட்டைச் சூதாட்டமாகக் கருத முடியாது என்பதால் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனு தொடர்பாக டிசம்பர் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x