Last Updated : 07 Dec, 2020 02:00 PM

 

Published : 07 Dec 2020 02:00 PM
Last Updated : 07 Dec 2020 02:00 PM

ஷேர் ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் நிவாரணம் கிடையாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

ஷேர் ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க இயலாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை நகர் பகுதியில் ஆட்டோக்களில் 3 நபர்களை மட்டுமே ஏற்றி செல்ல அனுமதி உள்ளது, ஆனால் சில ஆட்டோக்களில் 10 முதல் 12 நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் ஆட்டோக்கள் விபத்துக்குள்ளாகின்றன. மேலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மதுரை நகர்ப் பகுதியில் 2019-ம் ஆண்டு வரை 5017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் ரூ 4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றிச் சொல்வதை நிறுத்தவில்லை.

எனவே போக்குவரத்து விதியை மீறி அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன்,புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், மதுரை நகர்ப் பகுதியில் 16,200 ஆட்டோக்கள் தற்போது செயல்படுகின்றன. 2016-2019 -ம் ஆண்டு வரை 1065 ஆட்டோக்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், ஷேர் ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்யும் பொழுது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க இயலாது.

மேலும் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் எத்தனை ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் பெயரில் எத்தனை ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன. தமிழ்நாடு முழுவதும் எத்தனை ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.

அதில் விதிகளை மீறிய எத்தனை ஷேர் ஆட்டோகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x