Last Updated : 06 Dec, 2020 05:36 PM

 

Published : 06 Dec 2020 05:36 PM
Last Updated : 06 Dec 2020 05:36 PM

ஜிப்மரில் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு; 71 சதவீதத்தினர் பங்கேற்பு: வரும் 11-ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள்

ஜிப்மரில் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இன்று நடந்தது. அதில் 71 சதவீதத்தினர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் வரும் 11-ம் தேதிக்குள் வெளியாகிறது.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) எம்பிபிஎஸ், எம்.டி., எம்.எஸ்., எம்டிஎஸ், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஹெச்டி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன.

இந்த நிலையில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வானது இக்கல்வியாண்டில் நீட் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட்டது. தற்போது டி.எம்., எம்.சி.ஹெச். ஆகிய முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று (டிச. 06) நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

தேர்வுகள் தொடர்பாக ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"இங்குள்ள 52 இடங்களுக்கு நாடு முழுவதும் 2,286 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,632 பேர் தேர்வு எழுதினர். இது 71.39 சதவீதம்.

நுழைவுத் தேர்வு இணையவழியில் நடைபெற்றது. புதுச்சேரி உட்பட மொத்தம் 11 நகரங்களில் 14 மையங்களில், கரோனா கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடைபெற்றது.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தினால் கூடுதலாக ஒரு மையம் சண்டீகரில் அமைக்கப்பட்டது. அங்கு ஹரியானா, பஞ்சாப், சண்டிகரை சேர்ந்தோர் தேர்வு எழுதினர்.

கரோனா காலமாக இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. நேரடியாக தேர்வு மையங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டது. அத்துடன் வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் டிச.11-ம் தேதிக்குள் ஜிப்மர் இணையதளத்தில் வெளியாக உள்ளன".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x