Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

பாம்பன் அருகே இன்று நள்ளிரவில் இருந்து நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கிறது ‘புரெவி’ புயல்: அதிகனமழை பெய்ய வாய்ப்பு; தென் மாவட்டங்களில் உஷார் நிலை

‘புரெவி’ புயல் காரணமாக பாம்பன் கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின.படம்: எல்.பாலசந்தர்

சென்னை

வங்கக் கடலில் நிலவி வரும் ‘புரெவி’ புயல், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய் யும். மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறா வளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர் களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி யில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயல், பாம்பனுக்கு தென்கிழக்கே சுமார் 370 கி.மீ. தொலைவிலும், கன்னியா குமரிக்கு வடகிழக்கே சுமார் 550 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையை கடக்கிறது. பின்னர் சற்று வலு குறைந்து, மன்னார் வளைகுடா பகுதிக்கு இன்று (3-ம் தேதி) காலை சென்றதும் மீண்டும் வலுப்பெற்று குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும். இது, பிற்பகலுக்கு முன்ன தாக பாம்பனை நெருங்கும். பிற்ப கலுக்குமேல் தென் தமிழக கடலோரப் பகுதியை ஒட்டியே நகர்ந்து கன்னியா குமரி - பாம்பன் இடையே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கக் கூடும். அப்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

இதன் காரணமாக சிவகங்கை, திரு நெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய அதிகனமழையும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங் களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (4-ம் தேதி) தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

5-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், இதர மாவட்டங் களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த இரு நாட் களுக்கு வானம் பொதுவாக மேகமூட் டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு முன்னேற்பாடுகள்

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தென் மாவட்டங்கள் உச்சகட்ட உஷார்நிலையில் உள்ளன. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 6-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகள், மலையோரங்கள், தாழ்வான பகுதிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற விசைப் படகுகள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கர்நாடகா, லட்சத்தீவு, மகாராஷ்டிரா, கேரளா போன்ற பகுதிகளில் கரை திரும்பியுள்ளன. 106 விசைப்படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவை இதுவரை கரைதிரும்பாமல் உள்ளன. மேலும், 14 படகுகள் தொடர்புகொள்ள முடி யாத இடத்தில் இருப்பதாக, இந்திய கடற் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களை மீட்பதற்கான தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் கடைகள், ஓட் டல்கள் அனைத்தையும் அடைக்க உத்தர விடப்பட்டுள்ளது. விவே கானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கான படகு போக்கு வரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமானங்கள் ரத்து

தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளின் கரையோரங்கள் மற்றும் 637 குளங்களின் கரைகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மணல் மூட் டைகள், ஆயிரக்கணக்கான புதிய மின் கம்பங்கள், நூற்றுக்கணக்கான மின் மாற்றிகள் ஆங்காங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி - சென்னை இடையே நேற்று மாலையில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று தூத்துக்குடி- சென்னை, தூத்துக்குடி- பெங்களூரு விமானங்கள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

மீனவர்கள் வெளியேற்றம்

ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 197 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென் னையில் இருந்து நேற்று அதிகாலை ராமேசுவரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் பேருந்து மூலம் ராமேசுவரம் சென்றனர். பாம்பன் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக தனுஷ் கோடியில் இருந்து மீனவ மக்கள் 360 பேரை பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் வருவாய்த் துறையினர் வெளி யேற்றி ராமேசுவரத்தில் அமைக்கப்பட் டுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தனர். தனுஷ்கோடி சாலையும் மூடப்பட்டது.

புயலை எதிர்கொள்ள மேற்கொள் ளப்படும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து ராமேசுவரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார்.

முதல்வரிடம் பிரதமர் விசாரிப்பு

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட நிர்வாகங்கள், பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில், ‘புரெவி’ புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரள முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘தமிழக முதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசினேன். ‘புரெவி’ புயலால் பாதிக்கப்படும் தமிழக பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதித்தேன். மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் தமிழகத்துக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளேன். பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x