Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

எட்டு மாதங்களுக்கு பிறகு பழநி மலைக்கோயிலுக்கு மின் இழுவை ரயில் இயக்கம்

கரோனா ஊரடங்கால், கடந்த 8 மாதங்களாக பழநி மலைக்கோயிலுக்கு இயக்கப்படாமல் இருந்த மின் இழுவை ரயில் நேற்று 50 சதவீத பக்தர்களுடன் இயக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்குச் செல்ல இயக்கப்படும் மின் இழுவை ரயில் (வின்ச்), கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் இயக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் ரோப்கார், மின் இழுவை ரயில் இயக்கப்படாததால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல படிப்பாதையை மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

தற்போது மேலும் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் 50 சதவீத பயணிகளுடன், மின் இழுவை ரயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மின் இழுவை ரயிலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு இயக்கப்பட்டது.

கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மின்இழுவை ரயில் சேவையைத் தொடங்கி வைத்தனர். ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

மின் இழுவை ரயில் இயக்கப்பட்டதால், கடந்த 8 மாதங்களாக மலைக்கோயில் செல்லமுடியாத முதியவர்கள், சிறுவர்கள் தற்போது மலைக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்யமுடியும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x