Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM

ராமநாதபுரம் உட்பட 3 மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர்.

ஆண்டிபட்டி

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து 1,445 கன அடியாக இருந்தது. இதையடுத்து அணையின் நீர் மட்டம் 61 அடியாக உயர்ந் துள்ளது (மொத்த உயரம் 71 அடி).

அணையிலிருந்து ஏற்கெனவே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக கால்வாய் வழியாக விநாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங் களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்காக வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி நேற்று மாலை விநாடிக்கு 2,800 கனஅடி நீர் சிறிய மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது.

டிச. 17 வரை 3 கட்டங்களாக 1,792 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர். ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வரும் என்பதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். ஆற்றில் குளிப்பதற்காக யாரும் இறங்கக் கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x