Published : 28 Nov 2020 03:18 AM
Last Updated : 28 Nov 2020 03:18 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவரை 544 பேர் சாட்சியம்: அப்போதைய ஆட்சியர், எஸ்பியிடம் விரைவில் விசாரணை

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு,தடியடி மற்றும் தொடர்ந்து நடந்தசம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழகஅரசு அமைத்தது.

ஏற்கெனவே 21 கட்ட விசாரணைநடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 517 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 679 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், 22-வது கட்டவிசாரணை தூத்துக்குடி கடற்கரைசாலை விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 23-ம் தேதிதொடங்கியது. இதில், அரசு அலுவலர்கள், தீயணைப்புத்துறையை சேர்ந்தவர்கள் என மொத்தம் 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 4 நாட்கள் நடைபெற்ற விசாரணை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில், மொத்தம் 27 பேர்ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியதாவது: அடுத்த கட்டமாக டிசம்பர்14 முதல் 18-ம் தேதி வரை விசாரணை நடைபெறும். இதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த காவலர் குடியிருப்பை சேர்ந்தவர்கள் ஆஜராக உள்ளனர். சம்பவ காலத்தில் இருந்த ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணைக்கு இறுதியில் அழைக்கப் படுவார்கள். இன்னும், 400 பேருக்கு மேல் விசாரணை நடத்தப்பட உள்ளது. விசாரணையை விரைவில் முடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது காயமடைந்தவர்கள், இறந்தவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதில், கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவேஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x