Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM

‘நிவர்' புயல் தாக்கத்தால் பண்ருட்டி வட்டத்தில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின

அண்ணாகிராமம் ஒன்றியத்தில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி விளைநிலம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

விருத்தாசலம்

‘நிவர்' புயல் தாக்கத்தால் பண்ருட்டி வட்டத்தில் சுமார் 1,000 ஏக்கர் விளை நிலம் நீரில் மூழ்கியுள்ளன.

‘நிவர்' புயலால் கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகப்படியாக கடலூர், நெல்லிக்குப்பம், பண் ருட்டி பகுதியில் 28 செ.மீட்டர் மழை, பரங்கிப்பேட்டையில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக பண்ருட்டி வட்டம் அண்ணா கிராம ஒன்றியத்துக்கு உட்பட்டஅவியனூர், அழகுபெருமாள் குப்பம், பேரங்கியூர் பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப் பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழைநீர் தேங்கி விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

கரும்பு தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது, பலத்த காற்று வீசியதால் குமணன் குளம், நடவீரப்பட்டு, பாலூர் பகுதியில் வாழை மரங்கள் மிகுந்த சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதையடுத்து கடலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை சிறப்பு அதிகாரியும், வேளாண்துறை செயலருமான ககன்தீப்சிங்பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் மழைநீரை வெளியேற்றுவது தொடர்பாக பொதுப்பணித் துறையினரிடம் ஆலோசித்து வருகின்றனர். மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்கள் குறித்து கணக்கீடு செய்து, இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x