Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி சென்னையில் டிச.1 முதல் தொடர் போராட்டம்: பாமக, வன்னியர் சங்க கூட்டுப் பொதுக்குழுவில் தீர்மானம்

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி சென்னையில் டிச.1 முதல் தொடர் போராட்டம் நடத்துவதாக பாமக, வன்னியர் சங்கத்தின் கூட்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனிஇடஒதுக்கீடு கோரும் போராட்டத்தை நடத்துவது பற்றி முடிவெடுக்க பாமக, வன்னியர் சங்கத்தின் கூட்டுப் பொதுக்குழுக் கூட்டம் இணைய வழியில் நேற்றுநடந்தது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித்தலைவர் அன்புமணி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை தாங்கினர். கட்சி, சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

தமிழக அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்துக்குமான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களைடிச.31-க்குள் அரசு வெளியிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி டிச.1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை அனைத்து பணி நாட்களிலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

டிச.31-ம் தேதிக்குள் விவரங்களை அரசு வெளியிடாவிட்டால், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஜனவரி பிற்பாதியில் தமிழகம் முழுவதும் மாபெரும் அறப் போராட்டம் நடத்தப்படும். மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் அளவிலும் போராட்டக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்து கிராமங்களிலும் அனுமதி பெற்று, போராட்டத்தின் கோரிக்கை விளக்கப் பதாகைகளை அமைக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘அழுகிய கனி.. சேலம் மாங்கனி’

இதில் ராமதாஸ் பேசியபோது, ‘‘வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987-ல் ஒரு வார காலம் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். 25 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டது வன்னியர் சமுதாயம். இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து கட்சியினரும் நம்மை ஏமாற்றி உள்ளனர். வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்குமாறு முதல்வர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். கருணாநிதி எங்களுக்கு அழுகிய கனியை கொடுத்தார். நீங்கள் நல்ல சேலத்து மாங்கனியை கொடுங்கள். நாங்கள் கேட்கும் இடஒதுக்கீட்டை வழங்கி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது உங்கள் கையில்தான் உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x