Last Updated : 20 Nov, 2020 06:19 PM

 

Published : 20 Nov 2020 06:19 PM
Last Updated : 20 Nov 2020 06:19 PM

7.5% உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மகளுக்கு இடம்; கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் பந்தல் தொழிலாளி

7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் தனது மகளுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த வழியின்றித் தவிக்கிறார், பந்தல் தொழிலாளி ஒருவர்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ள சித்தயங்கோட்டையைச் சேர்ந்த மு.பாண்டிமுருகன் பந்தல் தொழிலாளி. இவரது மகள் சோபனாவுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூயில் எம்பிபிஎஸ் பயில இடம் கிடைத்துள்ளது.

மு.பாண்டிமுருகன்

இதையடுத்து, பாண்டிமுருகன் தனது மகள் சோபனாவுடன் இன்று (நவ.20) திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றபோது முதலாம் ஆண்டில் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் எனப் பல்வேறு கல்வி நடைமுறைகளைக் குறிப்பிட்டு ரூ.7.15 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்றும், கலந்தாய்வின்போது ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்திவிட்டதால் எஞ்சிய ரூ.6.90 லட்சத்தைக் கட்டுமாறும் கூறப்பட்டது.

கட்டணத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாண்டிமுருகன், பணத்தைத் திரட்டவும், தனது மகளை மருத்துவக் கல்லூரியில் எப்படி சேர்ப்பது என்றும் வழி தெரியாமலும் தவிக்கிறார்.

இதுகுறித்து, பாண்டிமுருகன் 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறுகையில், "மருத்துவராக வேண்டும் என்பதே எனது மகளின் கனவு. 5-ம் வகுப்பு படித்தபோதிலிருந்து இதை எப்போதும் கூறிவருவார். கடந்த ஆண்டு 383 மதிப்பெண்கள் எடுத்து பிளஸ் 2 முடித்தார். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் இலவச நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார். அப்போது, தேர்ச்சி பெற்றிருந்தும் இடம் கிடைக்கவில்லை.

மருத்துவர் ஆவதே எனது கனவு என்று கூறி வேறு படிப்பில் சேர மறுத்துவிட்டார். அதேவேளையில், தனியார் பயிற்சி மையத்தில் சேர்க்கும் அளவுக்குக் குடும்பச் சூழல் இல்லாததால், வீட்டில் இருந்தவாறே நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்த ஆண்டு நீட் தேர்வில் 168 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

இந்தநிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் அரசாணையின் கீழ் எனது மகளுக்கு திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எம்பிபிஎஸ் சேர இடம் கிடைத்துவிட்டதால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். தனது கனவு நனவாகப் போவதை எண்ணி எனது மகளும் மகிழ்ச்சி அடைந்தார்.

ஆனால், தனியார் கல்லூரியில் ரூ.6.85 லட்சம் கட்ட வேண்டும் என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்தோம். இவ்வளவு கட்டணம் வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இருப்பினும், கல்லூரியில் அனுமதி போட்டுவிட்டோம். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு கட்டணத்தைக் கட்டுவதற்கு கல்லூரியில் அனுமதி வாங்கியுள்ளேன்" என்றார்.

மாணவி சோபனா கூறும்போது, "எனது தந்தையால் அவ்வளவு பணத்தைத் திரட்ட முடியாது. கல்விக் கடனும் முதலாம் ஆண்டில் கிடைக்காது என்று கூறுகின்றனர். எனவே, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசோ அல்லது வேறு எவருமோ கட்டணத்தைச் செலுத்த எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x