Published : 27 Oct 2015 09:30 AM
Last Updated : 27 Oct 2015 09:30 AM

சென்னையில் வேகமாக பரவும் காய்ச்சல்: ஒரே நாளில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

சென்னை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தாம்பரம் அடுத்த முடிச்சூர் கொம்பியம்மன் நகரை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகள் ஆயிஷா (5). காய்ச்சலால் பாதிக் கப்பட்ட ஆயிஷா, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டிருந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ஆயிஷா நேற்று பரிதாபமாக இறந்தாள்.

திருவொற்றியூரை சேர்ந்தவர் போதகாந்தன் (40). இவரது மனைவி நிர்மலா (36). இவர்களின் மகன் ஹரிஹரன்(4) காய்ச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தையை நேற்று அதிகாலை 2 மணி அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காலை 6 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி ஹரிஹரன் உயிரிழந்தார். இதே ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று அதி காலை 5 மணிக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வந்த பெண் குழந்தை ஒன்றும் உயிரிழந்தது.

ஒருவர் பலி

தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் அப்துல் ஜாகீர் (38). கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஜாகீர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஜாகீர் வீட்டுக்கு வந்தார். இரவில் அவருக்கு மீண்டும் காய்ச்சல் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் ஜாகீர் உயிரிழந்தார்.

பரவும் காய்ச்சல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒரே நாளில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் காய்ச்சலால் உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தை ஹரிஹரனின் உறவினர் நரேஷ் கூறும்போது, “ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் குழந்தைகள் சிகிச்சைப் பெற்று வருகின்றன. ஹரிஹரன் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு பெண் குழந்தையும் உயிரிழந்தது. என்ன காய்ச்சல் என்று டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. திருவொற்றியூர் பகுதியிலும் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x