Published : 17 Nov 2020 04:44 PM
Last Updated : 17 Nov 2020 04:44 PM

'காவிரி கூக்குரல்' திட்டத்தில் பொதுமக்களும் இணைந்து மரம் நடும் வாய்ப்பு: ஈஷா அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

'காவிரி கூக்குரல்' திட்டத்தில் பொதுமக்களும் இணைந்து மரம் நடும் வாய்ப்பை வழங்க உள்ளதாக, ஈஷா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஈஷா மையம் இன்று (நவ. 17) வெளியிட்டுள்ள அறிக்கை:

"மக்களில் பலருக்கும் மரம் நட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், எங்கு நடுவது, அதை எப்படிப் பராமரிப்பது என்று தெரியாமல் இருப்பர். இப்படி மரம் நட விரும்பும் மர ஆர்வலர்கள் சொந்தமாக நிலம் இல்லாவிட்டாலும் அவர்களும் மரம் நடும் பணியில் தங்களை இணைத்துக் கொள்ள 'காவிரி கூக்குரல்' இயக்கம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மரம் நட விரும்பு' என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளின் மூலம் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று மரக் கன்றுகளை நடவு செய்ய முடியும்.

'காவிரி கூக்குரல்' இயக்கம் 'மரம் சார்ந்த விவசாயம்' குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் உருவாக்கி வருகிறது. அதன் விளைவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் பெருமளவில் தங்களின் விளைநிலங்களில் மரக் கன்றுகளை நட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவ்வாறு முன்வரும் விவசாயிகளின் விளைநிலங்களில் ஈஷா மரம் சார்ந்த விவசாயத் திட்டத்தின் பிரதிநிதி நேரில் சென்று மண் மற்றும் நீரின் தன்மைகளை ஆய்வு செய்து அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ற மரக்கன்றுகளைப் பரிந்துரை செய்கின்றனர். பின்னர் விவசாயிகளின் தேர்வின் அடிப்படையில் மரக் கன்றுகள் விளைநிலங்களில் நடப்படுகின்றன.

இவ்வாறு விவசாயிகளின் விளைநிலங்களில் மரக் கன்றுகள் நடப்படுவதால் மரக் கன்றுகளின் பராமரிப்பு எளிதாகிறது. அதேபோல், மரங்களினால் மண் வளமும், நீர் வளமும் பெருகும் நிலை ஏற்படுகிறது. மேலும், மரங்கள் பல்வேறு வகைகளில் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்கின்றது.

தமிழகத்தில் மட்டும் 30 ஈஷா நாற்றுப் பண்ணைகள் இயற்கை முறையில் மரக் கன்றுகளை உற்பத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் முழுவதும் மாதம்தோறும் வெவ்வேறு இடங்களில் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற இருக்கின்றது. இதன் தொடக்கமாக முதல் நிகழ்வு கரூர் மாவட்டம் தொட்டியபட்டி கிராமத்தில் வரும் புதன் கிழமை (நவ. 18) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தங்களை இணைத்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 94437 19705 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தங்களின் விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்த தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்".

இவ்வாறு ஈஷா மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x