Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM

தீபாவளிக்கு சென்றவர்கள் ஊர் திரும்புவதற்காக நவம்பர் 18 வரை 16 ஆயிரம் பேருந்துகள் இயக்க ஏற்பாடு: சென்னைக்கு மட்டும் 3,416 சிறப்பு பேருந்துகள்

கோப்புப்படம்

சென்னை

தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்தவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்ப வசதியாக தமிழகம் முழுவதும் நேற்று முதல் வரும் 18-ம் தேதி வரை 8 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் உட்பட 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னைக்கு மட்டும் 3,416 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடச் செல்லும் மக்களின் வசதிக்காக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து தேவைக்கு ஏற்ப 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், சென்னையில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் சுமார் 4 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

இதற்கிடையே, தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பலரும் சொந்த ஊரில் இருந்து பணியாற்றும் இடத்துக்கு நேற்று காலை முதல் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சென்னை, கோவை, திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

தீபாவளிக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் வசிப்பிடம் திரும்ப வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள், தேவைக்கு ஏற்ப 8 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் உட்பட 16 ஆயிரம் பேருந்துகளை இயக்க உள்ளோம். இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு மட்டும் 3,416 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் சென்னைக்கு திரும்புவதால் மாநகர, புறநகர் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படாமல் தடுக்க போக்குவரத்து காவலர்களுடன், போக்குவரத்து அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் பயணிகள் இறங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து மாநகரின் பல்வேறு இடங்களுக்கு செல்ல போதிய அளவில் இணைப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x