Last Updated : 12 Nov, 2020 07:20 PM

 

Published : 12 Nov 2020 07:20 PM
Last Updated : 12 Nov 2020 07:20 PM

தீபாவளி முன்பணம் வழங்காததால் கல்லல் கல்வித்துறை அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் 

தீபாவளிப் பண்டிகை முன்பணம் வழங்காததால் கல்லல் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் வழங்கப்படுகிறது. அந்த தொகையை அவர்கள் 10 தவணைகளாக 10 மாதங்களில் திருப்பி செலுத்த வேண்டும்.

அதன்படி இந்தாண்டு முன்பணம் பெறும் ஆசிரியர்கள் பட்டியலை கேட்டு சம்பந்தப்பட்ட கல்வித்துறை அலுவலகங்களுக்கு கருவூல கணக்குத்துறை கடிதம் அனுப்பியது.

ஆனால் கல்வித்துறை சார்பில் முறையான பட்டியல் அனுப்பாததால் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. இதனால் குறைவான ஆசிரியர்களுக்கு மட்டுமே முன்பணம் வழங்கப்பட்டது.

இதுதொடர்பான புகாரையடுத்து முதன்மைக் கல்வி அலுவலர் முயற்சியால் சில ஒன்றியங்களில் விடுப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் கல்லல் வட்டாரத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 64 ஆசிரியர்களுக்கு முன்பணம் வழங்கவில்லை. இதையடுத்து அவர்கள் நேற்று கல்லல் வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசப்படுத்தினர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கல்லல் வட்டாரத்திற்கு குறைவான தொகையே ஒதுக்கப்பட்டதால் அனைவருக்கும் கல்வித் திட்டம், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு முன் பணம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வழங்க முடியவில்லை. அவர்களுக்கும் முன்பணம் பெற்று தர முயற்சித்து வருகிறோம்.

மேலும் நவ.14-ம் தேதி தீபாவளி என்பதால் இனி முன்பணம் பெற்று வழங்குவதில் சிரமம் உள்ளது, என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x