Last Updated : 11 Nov, 2020 01:00 PM

 

Published : 11 Nov 2020 01:00 PM
Last Updated : 11 Nov 2020 01:00 PM

விதிகளை மீறி அரசின் இலவச சலுகைகளை பெறும் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை

விதிகளை மீறி அரசின் இலவச சலுகைகளை பெறும் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காளையார்கோவில் பல்லூரைச் சேர்ந்த ராஜா, தனக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ராஜா அரசுப் பள்ளி ஆசிரியராகவும், அவர் மகன் அரசு மருத்துவராக இருப்பதாகவும், இதை மறைத்து அரசின் இலவச பட்டா வாங்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனால் மனுவை திரும்ப பெற அனுமதிக்கக்கோரி ராஜா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரும், அவரது மகனும் அரசு ஊழியர்களாக இருப்பதை மறைத்து அரசின் இலவச வீட்டு மனை பட்டா பெற்றுள்ளனர்.

நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தினர் பெயரில் 5 பட்டாக்கள் பெற்றுள்ளனர். இது நீதிமன்றத்துக்கு தெரியவந்ததும் வழக்கை திரும்பப் பெறுவதாக மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏழைகளுக்கு வழங்கப்படும் அரசின் சலுகையை மனுதாரர் குடும்பம் ஏமாற்றி பெற்றுள்ளது. மனுதாரர் குடும்பம் மட்டும் 5 இலவச வீட்டுமனை பட்டாக்கள் பெற்றுள்ளனர்.

அந்த இடத்தில் வீடும் கட்டியுள்ளனர். இதுபோன்ற அரசு ஊழியர்களின் நடவடிக்கையால் ஊழல் வழக்குகள் அதிகரிக்கின்றன. அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். மனுதாரர் தவறான உதாரணமாக இருந்துள்ளார்.

இந்த வழக்கில் வருவாய்த்துறை, சமூக நலத்துறை செயலர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ள சொத்துக்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு எப்படி இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது என்பது குறித்து வட்டாட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும். இதேபோல் எத்தனை பேர் இலவச வீட்டு மனை பட்டா பெற்றுள்ளனர் என்பது தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

விதிமுறைகளை மீறி அரசின் சலுகைகளை பெற்ற அரசு ஊழியர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும். குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க முடியும். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் நவ. 30-ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x