Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM
சட்டவிரோத கிரானைட் குவாரிகள்மூலம் அதன் உரிமையாளர்கள் சம்பாதித்த ரூ.977 கோடி சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அமலாக்கத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயம், மதுரை மாவட்டத்தில் மட்டுமேரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக சகாயம் அல்லாமல் புதிய நிபுணர்குழு அமைத்து, அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு தொடர்பாக மறுமதிப்பீடு செய்யக் கோரி தென்னிந்திய கிரானைட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அமலாக்கத் துறை தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்பட்ட கிரானைட் குவாரி மூலமாக அவற்றின் உரிமையாளர்கள் சம்பாதித்தரூ.977.63 கோடி மதிப்பிலான சொத்துகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதில், மதுரை மாவட்டத்தில் பிஆர்பி கிரானைட் நிறுவனம் உட்பட பலருக்கு சொந்தமான ரூ.103 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த 2012 முதல் பிஆர்பிஉள்ளிட்ட பல்வேறு கிரானைட் நிறுவனங்களுக்கு எதிராக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை, சட்டவிரோதமாக வெடிமருந்துகளை பயன்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள்,‘‘கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்கள் பிற மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் வகையில்மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதா?’’ என்று கேட்டனர். இதுதொடர்பான பணிகள் நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 30-ம்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT