Published : 10 Nov 2020 05:08 PM
Last Updated : 10 Nov 2020 05:08 PM

கோவிட்-19 தடுப்பு; ஜோ பைடன் நியமித்துள்ள குழுவில் தமிழக மருத்துவர்: ஸ்டாலின் வாழ்த்து

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், கோவிட் -19 தடுப்புக்கு அமைத்துள்ள தேசியப் பெருந்தொற்றுத் தடுப்பு அணியில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் செலின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் செலின், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், அமெரிக்காவின் காசநோய் தடுப்புப் பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

மருத்துவர் செலின்

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், அமெரிக்காவில் கரோனா தொற்றுத் தடுப்புக்காக, தேசிய பெருந்தொற்றுத் தடுப்புக் குழு ஒன்றை நியமித்துள்ளார். 13 பேர் கொண்ட இந்தக் குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் செலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மருத்துவர் செலினுக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 10) தன் முகநூல் பக்கத்தில், "அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், கோவிட் -19 தடுப்புக்கு அமைத்துள்ள தேசியப் பெருந்தொற்றுத் தடுப்பு அணியில் செலின் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்ப் பூர்வீகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இத்தகைய முக்கியப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்.

பணி சிறக்க வாழ்த்துகள்!" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x