Last Updated : 10 Nov, 2020 03:15 PM

 

Published : 10 Nov 2020 03:15 PM
Last Updated : 10 Nov 2020 03:15 PM

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கக் கூடாது: அரசுக்கு ஆசிரியர் அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கக் கூடாது என்று, தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைமையகங்களில் இன்று (நவ. 10) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

அருள்சகோதரி ரோஸ்மேரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.யோகராஜ், செயலாளர் டி.லியோ லாரன்ஸ் உட்பட 300-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், "மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் சேர்க்க வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை நிறுத்திப் பிறப்பித்த அரசாணை எண்: 37, 116 ஆகியவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் நியமன அலுவலர்களான தாளாளர், செயலாளர் ஆகியோர் முன் அனுமதியுடன், உயர் கல்வி பயின்ற அனைவருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு ஏற்ப உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி இணைப் பிரிவை அனுமதிக்கும் அரசாணை எண்: 148-ஐ எவ்வித நிபந்தனையுமின்றி நடைமுறைப்படுத்தி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் இலவச ஆங்கில வழிக் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை ஏற்கெனவே இருந்ததைப்போல் 57 ஆக மீண்டும் மாற்ற வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள நிரப்பத்தக்க அனைத்துப் பணியிடங்களையும் தமிழ்நாடு அரசு உடனே நிரப்ப வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது, "அரசாணை 438-ன்படி மருத்துவப் படிப்பில் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதி திராவிடர் - பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர்- சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகள் குறித்து குறிப்பிடப்படவில்லை.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். எனவே, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை தமிழ்நாடு அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்காமல், அரசாணை எண் 438-ல் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் சேர்த்து, திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும். இடஒதுக்கீட்டு அளவையும் 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x