Last Updated : 09 Nov, 2020 05:23 PM

 

Published : 09 Nov 2020 05:23 PM
Last Updated : 09 Nov 2020 05:23 PM

மானாமதுரை அருகே தலித் பெண் ஊராட்சித் தலைவருக்கு தொடர் நெருக்கடி: பதவியை ராஜினாமா செய்ய முடிவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தலித் பெண் ஊராட்சித் தலைவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்தததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

மானாமதுரை அருகே உள்ளது கால்பிரவு ஊராட்சி. பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இந்த ஊராட்சி, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு ராஜேஸ்வரி பாண்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தாழ்த்தப்பட்டோர் என்பதால் அவருக்கு துணைத் தலைவர் நாகராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர்கள் ஊராட்சித் தலைவரிடம் பேசுவதுமில்லை.

பதவியேற்று ஓராண்டில் ஊராட்சித் தலைவரால் எந்தவொரு நலத்திட்ட பணிகளும் செய்ய முடியவில்லை. இதுகுறித்து அவர் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்காதநிலையில் ராஜினாமா செய்யப்போவதாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து ஒன்றியத் தலைவர் லதா அண்ணாத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமீனாள், சுந்தரமகாலிங்கம் ஆகியோர் கால்பிரவு ஊராட்சியில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி பாண்டி கூறியதாவது: என்னை சாதி ரீதியாக மிரட்டுகின்றனர். வார்டு உறுப்பினர்களை என்னிடம் பேச விடுவதில்லை.

மேலும் பணியை செய்யவிடாமலும் தடுக்கின்றனர். வங்கி காசோலை புத்தகத்தை பறித்து வைத்து கொண்டனர். அனைவரும் துணைத் தலைவரை பேச்சை தான் கேட்கின்றனர். மேலும் ஊராட்சி அலுவலகம், மோட்டார் அறை சாவிகளை சிலர் வைத்து கொண்டனர்.

ஊராட்சிக்கு சொந்தமான தென்னை மரங்களை ஏலம் விடாமல் தடுக்கின்றனர். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன், என்று கூறினார்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள் கூறுகையில், ‘‘விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x