Published : 08 Nov 2020 06:29 PM
Last Updated : 08 Nov 2020 06:29 PM

7.5% இட ஒதுக்கீடு; அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் அடுத்த ஆண்டு சேர்க்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் அடுத்த ஆண்டு 7.5 சதவீத மருத்துவக் கல்வி உள் ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் என்று, பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (நவ. 08) விடுத்துள்ள அறிக்கை:

"தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்தது வரவேற்கத்தக்கது. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் அதில் உட்படுத்தியிருக்க வேண்டும். இந்த ஆண்டு கடந்துவிட்டது. அடுத்த ஆண்டு இதை அரசு செயல்படுத்த வேண்டும்.

அரசு உதவி பெறும் கல்விக்கூடங்களின் தாளாளர்கள் அதிகாரமற்றவர்கள். அது கவுரவப் பதவி மட்டுமே. அரசுப் பள்ளிகளின் கட்டணத்தையே அவர்களும் வசூல் செய்கின்றனர். ஆசிரியர்களுக்கு அரசுதான் முழுமையாக ஊதியம் அளிக்கிறது. அங்கேயும் அரசின் சார்பில் சத்துணவு வழங்கப்படுகிறது. ஏழை மாணவர்கள் அங்கும் அதிக அளவில் படித்து வருகின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பொருளாதார நிலை மிகக் குறைவானது. ஆகையால் வரும் கல்வி ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் 7.5 சதவீத மருத்துவக் கல்வி உள் ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும்".

இவ்வாறு ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x