Last Updated : 07 Nov, 2020 01:33 PM

 

Published : 07 Nov 2020 01:33 PM
Last Updated : 07 Nov 2020 01:33 PM

ஆன்லைன் வர்த்தகத்தில் பண நஷ்டம்; வர்த்தக நிறுவனம் முன்பு தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட முதலீட்டாளர்

கோவையில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட பண நஷ்டம் காரணமாக, வர்த்தக நிறுவனம் முன்பு இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி பெட்ரோல் ஊற்றி, முதலீட்டாளர் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவித்ததாவது:

"கோவை ராமநாதபுரம் அருகேயுள்ள நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் தனபால் (48). இவர் ஆன்லைன் வர்த்தகத் தொழிலில் முதலீடு செய்து வந்துள்ளார். இவரது மனைவி உமா. இவர், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியையாக உள்ளார். அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகேயுள்ள ஒரு தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் தனபால் பணத்தை முதலீடு செய்து இருந்தார். அதில் போதிய அளவுக்கு வருவாய் கிடைக்காமல் பல லட்ச ரூபாய் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக தனபால், மன உளைச்சல் அடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். பண நஷ்டத்தால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த தனபால், வீட்டில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்று (நவ.7) காலை வெளியேறினார்.

கடிதத்தைத் தாமதமாகப் பார்த்த அவரது குடும்பத்தினர், தனபாலைத் தேடியுள்ளனர். மேற்கண்ட பகுதியில் உள்ள ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கு வந்து, அங்கிருந்த நிர்வாகிகள் சிலரிடம் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு எதிரே காலியிடத்தில் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தின் அருகே சென்று அதன் மீது ஏறி அமர்ந்தார்.

பின்னர், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்துத் தன் மீது ஊற்றி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த தனபாலின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்து தற்கொலை செய்து கொண்டதால், அந்த வாகனமும் கருகியது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், பண நஷ்டம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்".

இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x