Published : 29 Oct 2015 03:10 PM
Last Updated : 29 Oct 2015 03:10 PM

பொன்னம்மாளிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி: ஆமதாபாத் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு ஏற்பாடு

மதுரை அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெறும் முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.பொன்னம்மாளிடம் நேற்று காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி செல்போன் மூலம் நலம் விசாரித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஏ.எஸ்.பொன்னம்மாள். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவருக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இரு வாரமாக இங்கு சிகிச்சை பெற்ற அவரை காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பார்க்கவில்லை. இதுகுறித்து `தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் அவரை பார்த்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் , கடந்த 3 நாளாக பொன்னம்மாளுக்கு புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்த்தபோது சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்டார். தற்போது சிகிச்சையால் அவருக்கு சுயநினைவு திரும்பி உறவினர்களை அடையாளம் கண்டு பேச ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், புதுடெல்லி சென்ற விருதுநகர் முன்னாள் எம்.பி. மாணிக்கம்தாகூர் இத்தகவலை ராகுல்காந்தியிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரது செல்போன் மூலம் ராகுல்காந்தி நேற்று மதியம் 2.55, இரவு 7 மணியளவில் இருமுறை பொன்னம்மாளிடம் பேசினார். இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அவர் ராகுலிடம் மகிழ்ச்சியுடன் பேசினார்.

அப்போது ராகுல்காந்தி, எதற்கும் கவலைப்படாதீர்கள், நாங்கள் இருக்கி றோம், எந்த உதவி என்றாலும் என்னு டைய தனிச் செயலரிடம் பேசுங்கள், உடனுக்குடன் மருத்துவ உதவி செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு ஏ.எஸ்.பொன்னம்மாள், வாழ்க்கையின் கடைசி தருணத்தில் தாங்கள் என்னிடம் பேசியது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். அதன்பின், பொன்னம்மாளின் உறவினர்களிடம் பேசிய ராகுல்காந்தி, புற்றுநோய்க்கு அவர் பெறும் சிகிச்சை, அவருக்கு எடுத்த ஸ்கேன் அறிக்கை, சிகிச்சை அளிக்கும் மருத்துவர், அவரது செல்போன் நம்பர் உள்ளிட்ட விவரங்களையும் கேட்டார். உடனே, ஏ.எஸ்.பொன்னம்மாள் உறவினர்கள் மருத்துவ விவரங்களை பேக்ஸ் மூலம் ராகுல்காந்திக்கு அனுப்பினர்.

அந்த விவரங்களை பார்த்த ராகுல்காந்தி, பொன்னம்மாளுக்கு சிகிச்சையளிக்கும் மதுரை அரசு மருத்துவமனை புற்று நோய் மருத்துவரிடமும் பேசி சிகிச்சை விவரங்களை கேட்டுள்ளார். 2-வது முறை பேசியபோது, ஏ.எஸ்.பொன்னம்மாளின் உறவினர்களிடம், ஆமதாபாத் புற்றுநோய் மருத்து வமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதற்கு தயாராக இருக்கும்படியும் தெரிவித்துள்ளார். அதனால், ஒரு வாரத்தில் ஏ.எஸ்.பொன்னம்மாள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற ஆமதாபாத் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நாளை பொன்னம்மாளை சந்திக்கவுள்ளார்.

ராகுல்காந்தியே நேரடியாக ஏ.எஸ்.பொன்னம்மாளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்ததால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x