Last Updated : 03 Nov, 2020 03:12 AM

 

Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

கடந்த ஓராண்டாக தலைமை இல்லை: புதுச்சேரி அதிமுகவில் மாநிலச் செயலர் பதவி காலி

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக புதுச்சேரியில் முக்கியக் கட்சிகள் கட்சிப் பணிகளை தொடங் கியுள்ளன. தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸில் மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் புதுச்சேரி வந்து நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தனது கட்சி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றி பணிகளை தொடங்கியுள்ளது. திமுகவும் கட்சித்தலைமையை சந்தித்து அடுத்தக்கட்ட பணிகளில் இறங்கியுள்ளது.

இந்தச் சூழலில் தமிழகத்தின் ஆளும் கட்சி, புதுச்சேரியில் முக்கியக் கட்சிகளில் ஒன்றாக இருக்கும் அதிமுக கடந்த ஓராண்டாக தலைமை இல்லாமல் உள்ளது. இதனால் அதிமுகவில் தொண்டர்கள் தவிப்பில் உள்ளனர்.

புதுச்சேரி அதிமுக மாநிலச்செயலர் புருஷோத்தமன் கடந்தாண்டு நவம்பரில், தனது விவசாய நிலத்துக்கு சென்றபோது விஷ வண்டு கடித்ததால் காலமானார். கட்சித்தொண்டர்கள் அவரின் ஓராண்டு நினைவு தினத்தை நேற்று அனுசரித்தனர்.

அதிமுக கட்சித் தொண்டர்கள் கூறுகையில், "புதுச்சேரியில் மாநிலச் செயலாளர் பதவி ஓராண்டாக காலியாக உள்ளது. அடுத்தடுத்து உள்ள முக்கிய நிர்வாகிகள் பதவியும் காலியாக உள்ளன. அவைத் தலைவராக இருந்த பாண்டு ரங்கன் காலமானதால் அப்பதவியும் காலியாக உள்ளது. புதுச்சேரி நகரச்செயலர், மாநில பொருளாளர், எம்ஜிஆர் மன்ற செயலர் , ஏராளமான தொகுதி செயலர்கள் பதவிகள் காலியாக உள்ளன.

வரும் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ளது. அத்துடன் உள்ளாட்சித் தேர்தலுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதரக் கட்சிகள் கட்சிப் பணிகளை தொடங்கியுள்ளன. புதுச்சேரி அதிமுகவில் தலைமை இல்லாததால் தொண்டர்கள் தவிப்பில் இருக்கிறோம். கட்சித் தலைமை பொறுப்புகளை நியமிப்பது அவசியம்" என்று தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x