Published : 02 Nov 2020 06:44 PM
Last Updated : 02 Nov 2020 06:44 PM

மதுரை காந்தி மியூசியத்தில் மியாவாக்கி அடர்வனம்: சுற்றுலாப் பயணிகளைக் கவர மாநகராட்சி ஏற்பாடு

மதுரை மாநகராட்சி காந்தி மியூசியம் வளாகத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகயைில் மியாவாக்கி அடர்காடு (அடர்வனம்) அமைக்கும் முயற்சியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

மதுரையை பசுமையான, தூய்மையான மாநகராக மாற்றுவதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும் மாநகராட்சி நிர்வாகம் அடர்வனங்களை உருவாக்கி வருகிறது.

மரக்கன்றுகள் நடும் சமூக அமைப்புகளை ஊக்குவிக்கிறது. அதன் அடிப்படையில் இன்று காந்திமியூசியம் வளாகத்தில் குறைந்த இடத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு மியாவாக்கி முறையில் அடர்வனம் உருவாக்கும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மரக்கன்றுகளை நட்டு இப்பணியை தொடங்கி வைத்தார்.

அவர் கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான விளாங்குடி இந்திரா நகர், தத்தனேரி மயானம், எல்லீஸ் நகர் நீரேற்று நிலையம், கோச்சடை, விளாங்குடி மயானம், கற்பக நகர் நீரேற்று நிலையம், மஸ்தான்பட்டி பழத்தோட்டம், அண்ணாநகர் மேல்நிலைத்தொட்டி, சாத்தமங்கலம் வார்டு அலுவலகம், மதிச்சியம் வார்டு அலுவலகம், செல்லூர் மேல்நிலைத்தொட்டி, தமுக்கம் ராஜாஜி பூங்கா, டாக்டர் தங்கராஜ் சாலை வார்டு அலுவலகம், ரிசர்வ் லைன் மேல்நிலைத் தொட்டி, ஐராவதநல்லூர் நுண்ணுயிர் உரக்கூடம், அனுப்பானடி ஆடுவதைகூடம், மூலக்கரை மயானம், அவனியாபுரம் பைபாஸ்ரோடு, ஐ.ஐ.ரோடு, எம்.எம்.சி.காலனி நுண்ணுயிர் உரக்கூடம், வெள்ளைக்கல் நுண்ணுயிர் உரக்கூடம், திருப்பரங்குன்றம் நுண்ணுயிர் உரக்கூடம், ஹார்விப்பட்டி நுண்ணுயிர் உரக்கூடம் ஆகிய 25 இடங்களில் மியாவாக்கி (அடர்வனம்) முறையில் ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 மரக்கன்றுகள் வீதம் சுமார் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டு 8 அடி முதல் 10 அடி வரை வளர்க்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பகிறது.

மேலும் 15 இடங்களில் புதிதாக மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது மதுரை சொராப்ட்டிமிஸ்ட் இண்டர்நேஷனல் தொண்டு நிறுவனத்தின் சார்பில் காந்திமியூசியம் வளாகத்தில் வேங்கை, மதுரம், இலுப்பை, நீர்மருது, தேக்கு, ருத்திராட்சம், நீர்குமிழ், சிசு உள்ளிட்ட அரியவகை மரஇனங்களை சார்ந்த சுமார் 120 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

இந்த மியாவாக்கி முறையின் மூலம் மரக்கன்றுகள் நடுவதால் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்க்கலாம். நெருக்கமான மரங்களால் பூமியில் வெப்பம் குறைவதுடன் காற்றின் ஈரப்பதமும் தக்கவைக்கப்படும்.

இந்த சிறிய வனத்திற்குள் பறவைகள், சிறிய புழு பூச்சிகள், தேனீக்கள் அதிகளவில் வாழ்வதற்கான சூழல் ஏற்படுவதுடன் உயிர்சூழல் மேம்படும், ’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் காந்தி மியூசியம் பொறுப்பாளர் நந்தகுமார், உதவிசெயற்பொறியாளர் மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், உதவிப்பொறியாளர் சோலைமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x