Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று 1,000 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட சாதம் சாற்றப்பட்டு, 500 கிலோ காய்கனிகள் மற்றும் இனிப்பு வகைகளால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பெருவுடையார்.

அரியலூர்/ தஞ்சாவூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னாபிஷேகம் எளிமையான முறையில் நடைபெற்றது.

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று 100 மூட்டை பச்சரிசியால் கோயில் வளாகத்திலேயே சாதம் சமைத்து பதிமூன்றரை அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்டு அபிஷேக ஆராதனை நடத்தப்படுவது வழக்கம்.

நிகழாண்டு ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று நடைபெற இருந்த 36-வது அன்னாபிஷேகத்துக்கு கரோனா பரவல் காரணமாக அரசு தடைவிதித்திருந்த நிலையில், அன்னாபிஷேகத்துக்கு பதிலாக அன்னக்காப்பு (அன்னம் சாற்றி அலங்காரம்) நடைபெற்றது.

51 கிலோ பச்சரிசியால் சமைக்கப்பட்ட சாதம் சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்டு மாலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, தஞ்சை பெரிய கோயிலில் 12 அடி உயர சிவலிங்கம், 54 அடி சுற்றளவுள்ள ஆவுடையார் கொண்ட ஒரே கல்லால் ஆன மூலவர் பெருவுடையாருக்கு 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கனிகள், இனிப்பு வகைகள், 250 கிலோ மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு நேற்று அன்னாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x