Published : 25 Oct 2020 11:53 AM
Last Updated : 25 Oct 2020 11:53 AM
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிளை நூலகக் கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி ஊராட்சியில் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு 2 மேல்நிலைப் பள்ளிகள், 4 அரசு நடுநிலைப் பள்ளிகள், ஒரு அரசு தொடக்கப் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இந்த ஊராட்சியில் உள்ள கிளை நூலகம், 2,200 சதுர அடி பரப்பளவுள்ள கட்டிடத்தில் இயங்கி வந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்நூலகம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது. முறையாக மராமத்து செய்யப்படா ததால் அக்கட்டிடம் முழுவதும் சேதமடைந்து எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதையடுத்து நூலகக் கட்டிடத்தைச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு வசதியாக சமூக ஆர்வலர்களின் முயற்சியால் நூலகம் தற்காலிகமாக தெற்குத் தெருவில் உள்ள ஒரு தனியார் வீட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் கிளை நூலகக் கட்டிடம் மராமத்து செய்யப்படவில்லை.
மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏர்வாடி கிளை நூலகக் கட்டிடத்தை முழுமையாக மராமத்து செய்து, நூலகத்தை தரம் உயர்த்த வேண்டும் என ஏர்வாடி ஊராட்சித் தலைவர் செய்யது அப்பாஸ், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் தமிழ் அரசி ஆகியோர் முதல்வர் தனிப்பிரிவு மற்றும் நூலகத் துறைக்கு மனு அனுப்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT