Published : 25 Oct 2020 06:20 AM
Last Updated : 25 Oct 2020 06:20 AM

இன்று ஆயுதபூஜை, நாளை விஜயதசமி கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளான இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், நாளைவிஜயதசமி திருநாளும் கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அரசியல்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: தீய சக்திகளை அழிக்கும் நல்ல சக்திகளின் வெற்றியை குறிக்கும் ஆயுதபூஜை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நம் வாழ்வில், உண்மையாய் இருத்தல், நன்மை செய்தல், நேர்மையை வெளிப்படுத்துதல் ஆகிய நற்பண்புகளை நிலைநிறுத்தி, நம் குடும்பங்களில் மிகுந்தவளத்தையும், வளர்ச்சியையும் அளிக்கும் புதிய ஆற்றலை பறைசாற்றுவதாய் இந்த விஜயதசமி நன்னாள் அமையட்டும். இத்திருவிழா நம் மாநிலத்திலும், நாட்டிலும் அமைதி, நல்லிணக்கம், வளம், நல்லஉடல்நலத்தை நல்கிட வாழ்த்துகள்.

தெலங்கானா ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன்: இந்தஆயுதபூஜை வெற்றிகளை குவிக்கும் வெற்றி திருநாளாக அனைவருக்கும் விளங்க வேண்டும். இந்திய மக்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துகள்.

முதல்வர் பழனிசாமி: மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல், செல்வம், கல்வி இன்றியமையாதது. மக்கள்அனைவரும் தங்கள் வாழ்வில் ஆற்றலில் மிகுந்து, செல்வத்தில் சிறந்து, கல்வியில் உயர்ந்து விளங்கமலைமகள், திருமகள், கலைமகளைப் போற்றி வணங்குவதே நவராத்திரி பண்டிகை. அதன் நிறைவாக, சிறப்பு மிக்க ஆயுதபூஜை, விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள்அனைவரும், எல்லா நலன்களும், வளங்களும் பெற்று, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்துகள்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின்நிறைவு நாளில் ஆயுதபூஜையையும், 10-வது நாளில் விஜயதசமியையும் பக்தியுடன் கொண்டாடி மகிழும் அன்புக்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துகள்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தொழிலையும், உழைப்பையும் போற்றி வணங்கும் ஆயுதபூஜையையும், வெற்றித் திருநாளான விஜயதசமியையும் கொண்டாடும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:இனி வரும் காலங்களில் மாணவர்கள் கல்வியிலும், தொழிலாளர்கள், தொழில் துறையினர் தங்கள் தொழில்களிலும் சிறந்து விளங்கி சாதனை படைக்க வாழ்த்துகள்.

பாரிவேந்தர் எம்பி: அனைவர் வாழ்விலும் ஒளி தீபம் ஏற்றுவதுகல்விதான் என்பதை உணர்ந்து கொண்டாடுவது சரஸ்வதி பூஜை. இந்த தத்துவங்களை கடைபிடித்து, அனைவரும் உன்னத வாழ்வைப் பெற வாழ்த்துகள்.

ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து: கல்வி, செல்வம், வீரம் எனும்முக்குணங்களை போற்றும் வகையில், முப்பெரும் தேவியரை வணங்கும் அனைவருக்கும் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துகள்.

சமக தலைவர் சரத்குமார்: ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி, கல்விக்கும், தொழிலுக்கும், செல்வத்துக்கும் உரிய தெய்வங்களை வணங்கி, எல்லா வளமும், நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x