Published : 22 Oct 2020 07:11 AM
Last Updated : 22 Oct 2020 07:11 AM

பருவமழை காலத்தில் 7.40 லட்சம் பேர் தங்கும் அளவுக்கு 9,393 மண்டபங்கள், சமுதாய கூடங்கள் தயார்: அமைச்சர் உதயகுமார் தகவல்

வடகிழக்கு பருவமழையின்போது 7.40 லட்சம் பேரை பாதுகாப்பாக தங்கவைக்க 9,393 இடங்கள் தயார்நிலையில் உள்ளன என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பரில் பெய்யும் வடகிழக்கு பருவமழையால் 47.32 சதவீத மழைநீர் கிடைக்கிறது. பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக மொத்தம் 4,133 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஊரக, நகர்புற பகுதிகளுக்கு முறையே குறுவட்டம், வார்டு அளவில் பாதிப்பின் தன்மை குறித்த ஆய்வு, பேரிடர் காலத்தில் தற்காத்துக்கொள்ள வெளியேறும் வழி, நிவாரண மையங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய வரைபடங்கள் தயார்செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை அளிக்கவும், தேடுதல், மீட்பு, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக 662 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1,000 காவலர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள், ஊர்க்காவல் படையை சார்ந்த 691 பேர் தயாராக உள்ளனர். இதுதவிர, 4,699 தீயணைப்பு வீரர்கள், 9,859 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை மீட்பாளர்களாக, பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்பட 43,409 பேர், கால்நடைகளை பாதுகாக்க 8,871 பேர், மரங்களை வெட்டி அகற்ற 9,909 பேர் தயாராக உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மின்னல் தாக்கத்தின்போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை ஆகியவற்றை உள்ளடக்கிய செயல்திட்டம் மாவட்டஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது, கரோனா காலகட்டம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தங்கும் மையங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி,குறைந்த அளவில் மக்களைதங்கவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிவறைகள், மருத்துவ முகாம்கள், தங்கும் மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் தமிழக அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x