Published : 20 Oct 2015 09:52 AM
Last Updated : 20 Oct 2015 09:52 AM
சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட 5 பட்டப் படிப்பு களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி என 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இதேபோல தனியார் நடத்தும் 5 சித்த மருத்துவக் கல்லூரிகள், 3 ஆயுர்வேத கல்லூரிகள், 8 ஓமியோபதி கல்லூரிகள், 4 யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 21 கல்லூரிகள் இருக்கின்றன.
6 அரசு கல்லூரிகளில் 336 இடங்கள் மற்றும் 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் உள்ளன.
இந்நிலையில் 2015-16-ம் கல்வி ஆண்டுக்கு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.என்.ஒய்.எஸ்., பி.எச்.எம்.எஸ்.) பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை கடந்த ஜூன் 29-ம் தேதி முதல் ஜூலை 24-ம் தேதி வரை நடந்தது.
தமிழகம் முழுவதிலும் இருந்து 5,075 பேர் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான 4,913 பேருக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று மாலையில் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறும்போது, “தரவரிசைப் பட்டியலின் நகல்கள் அங்குள்ள தகவல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன.
மாணவ, மாணவிகள் வந்து பார்த்துச் செல்கின்றனர். தர வரிசைப் பட்டியல் www.tnhealth.org என்ற இணையதளத்தில் நாளை (இன்று) பதிவேற்றம் செய்யப்படும்.
2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT