Published : 12 Oct 2020 05:41 PM
Last Updated : 12 Oct 2020 05:41 PM

தீபாவளி பட்டாசு விற்பனைக்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்: நெல்லை ஆட்சியர் தகவல்

தீபாவளி பட்டாசு விற்பனைக்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் வரும் 23-ம் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம் (6 நகல்), கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் (அ) வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம். உரிமத்திற்கான கட்டணம் ரூ.500-ஐ அரசுக் கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான். இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை , வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை), வரி ரசீது, புகைப்படம் 2 (பாஸ்போர்ட் சைஸ்) ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வழிமுறைகளை கடைபிடித்து தற்காலிக பட்டாசு உரிமம் வேண்டுவோர் 23.10.2020-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தங்களின் ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிவு பெற்றவுடன் ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடனும், தற்காலிக உரிமத்தின் ஆணையினை தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம். மேற்கண்ட தேதிக்கு பின் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும், நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழி முறை பொருந்தாது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தற்காலிக பட்டாசு உரிமம் பெறுபவர்கள் கரோனா பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு விதிமுறைகளை தவறாது கடைபிடிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x