Published : 09 Oct 2020 10:35 AM
Last Updated : 09 Oct 2020 10:35 AM

ராம்விலாஸ் பாஸ்வான் மறைவு; வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றார்: ஆளுநர், தமிழக முதல்வர் இரங்கல்

ராம்விலாஸ் பாஸ்வான்: கோப்புப்படம்

சென்னை

ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவுக்கு ஆளுநர், தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

அதன்பின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு ராம்விலாஸ் பாஸ்வானுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று (அக்.08) காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மற்றும் ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவுச் செய்தியை அறிந்து வேதனையடைந்தேன். நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ரசாயனங்கள் மற்றும் உரங்கள், சுரங்கங்கள், தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் தொழிலாளர் நலத்துறை எனப் பல்வேறு துறைகளை அவர் முழு அர்ப்பணிப்புடன் கையாண்டார் மற்றும் அத்துறைகளில் அவரது வலுவான அடையாளத்தைப் பொறித்தார்.

லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனர். அவர் நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், அரசியல் ஞானமுள்ள தொலைநோக்குத் தலைவராகவும் இருந்தார். அவர் எளிமை, பணிவு, ஆளுமைத் திறன் மற்றும் தாழ்த்தப்பட்ட வர்க்கத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அறியப்பட்டார். ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருந்தார், தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றார். நலிந்த மக்களின் முன்னேற்றத்தில் அவர் செய்த பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது அகால மறைவு இந்திய மக்களுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும், குறிப்பாக பிஹார் மாநிலத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர்

பிரபலமான மூத்த அரசியல்வாதியும், லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன்.

ராம்விலாஸ் பாஸ்வான் இளம் வயதில் சமூகப் பணியாற்ற ஆர்வம் கொண்டு அரசியலுக்கு வந்தவர். இவர் அரசியல் மட்டுமின்றி, சமூக நீதிக்காவும் அயராது உழைத்தவர். ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து பாடுபட்டவர். பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சிறப்புக்குரியவர். நாடாளுமன்றத்தில் தனது கருத்துகளை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். இவர் தொழில் துறை, வேதிப்பொருள் மற்றும் உரத்துறை, தகவல் தொலைத்தொடர்புத் துறை உள்ளிட்ட பல துறைகளில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாகப் பழகக்கூடிய பண்பாளர்.

'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான்.

ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சித் தொண்டர்களுக்கும், இந்தியாவுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x