Published : 07 Oct 2020 11:32 AM
Last Updated : 07 Oct 2020 11:32 AM

வழக்கமான பரிசோதனைக்காக அப்பா மருத்துவமனை சென்றுள்ளார்; வதந்திகளை நம்பாதீர்: விஜய பிரபாகரன்

சென்னை

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து, அவருடைய மகன் விஜய பிரபகாரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த செப்.22-ம் தேதி கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருடைய மனைவி பிரேமலதாவும் கரோனா தொற்று பாதிப்பால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருவருமே கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து அக்டோபர் 2-ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள். இதனிடையே, நேற்றிரவு (அக்டோபர் 6) விஜயகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது. தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான பரிசோதனைதான். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்கள்.

இதனிடையே, நேற்றிரவு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

"தயவுசெய்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உடல்நிலை மோசமடைந்து அப்பா மருத்துவமனைக்குச் செல்லவில்லை. அப்பா நன்றாக இருக்கிறார். ஏற்கெனவே மருத்துவமனை போய்விட்டு வந்ததற்காக, வழக்கமான செக்-அப் செய்து கொள்வதற்காக அப்பா சென்றுள்ளார். அதற்குள் அனைத்து மீடியாவிலும் உடல்நிலை சரியில்லை என்று போட்டு வருகிறார்கள். அப்பாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்களுடைய குடும்பத்திற்கு ஒரு சின்ன சுதந்திரம், தனியுரிமை இல்லாமல் அனைத்தையும் செய்தியாக்கி விடுகிறீர்கள்.

எத்தனையோ மக்கள் கேப்டன் மீது அன்பாகவும், பாசமாகவும் இருக்கிறார்கள். உடனே அனைத்தையும் செய்தியாக்கினால் இரவு நேரத்தில் அனைவருக்குமே டென்ஷன். எதுவாக இருந்தாலும் எங்களிடம் கேட்டுவிட்டுச் செய்திகளைப் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அப்பா நாளைக்கு வீட்டுக்கு வந்துவிடுவார். இதுவொரு சின்ன விஷயம். கரோனா என்ற பெரிய வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால், கவனமாக இருப்பதற்காக அடிக்கடி பரிசோதனை செய்வோம். இன்னும் 2-3 முறை கூட போய் பரிசோதனை செய்வோம். பலருமே எனக்கு தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் உடனடியாக ஃபேஸ்புக் லைவ்வில் வந்து பேசுகிறேன்.

வழக்கமான பரிசோதனைக்காக அப்பா மருத்துவமனை சென்றுள்ளார். செய்தி வேண்டும் என்பதற்காக அனைத்தையும் தயவுசெய்து செய்தியாக்காதீர்கள். பலருக்கும் தேவையில்லாத மன உளைச்சல், டென்ஷன் உருவாகிறது. அடிக்கடி இதே மாதிரி செக்கப் செய்து கொள்வதற்காகச் செல்வோம். அனைத்தையும் செய்தியாக்கி அனைவரையும் பயமுறுத்திக் கொண்டு இருக்காதீர்கள். கேப்டனுக்கு ஒன்றும் ஆகாது. சூப்பராக இருக்கிறார். நன்றி".

இவ்வாறு விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x