Published : 14 Sep 2015 11:17 AM
Last Updated : 14 Sep 2015 11:17 AM

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பதவி உயர்வு - இடஒதுக்கீட்டை தவிர்க்கும் முயற்சியை கைவிட வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

ஆதிதிராவிடர், பழங்குடியின ருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை தவிர்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதற்கு எதிராக, நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஐந்து வங்கிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தன.

உயர்நிலைப் பொறுப்பு களுக்கான பதவி உயர்வுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதற்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் 2009-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக நாட்டுடைமையாக்கப்பட்ட ஐந்து வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, 2015 ஜனவரி 9 அன்று உச்ச நீதிமன்றம், தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளன. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளும் மத்திய அரசும் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் சீராய்வு மனு, இந்திய அரசியல் சட்டத் திருத்தத்துக்கு எதிரானது. இது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வேலை வாய்ப்பு களையும், பதவி உயர்வுகளையும் பாதிக்கும். எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் தாக்கல் செய்திருக்கும் சீராய்வு மனுவை உடனடியாகத் திரும்பப் பெற்று, வங்கிகளின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதற்கான நடவடிக் கையை பிரதமர் மோடி எடுக்க வேண்டும்.

தமிழக அரசு மருத்துவ மனைகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப மற்றும் வட்டார சுகாதார அரசு மருத்துவமனைகளில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 3 ஆயிரம் செவிலியர் திடீரென ‘டிஸ்மிஸ்’ செய்யப் பட்டிருக்கிறார்கள்.

இந்த போக்கை மாற்றிக் கொண்டு ‘டிஸ்மிஸ்’ செய்யும் நடவடிக்கையைத் திரும்பப் பெற்று அவர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘ஹஜ்’ புனித யாத்திரை தொடங்குவதையொட்டி மெக்காவில் தொழுகை நடத்து வதற்கு ஏதுவாக விரிவாக்கப் பணிகளின்போது இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பெய்த மழையால் 107 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இறந்தவர்களின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x