Published : 30 Sep 2020 07:14 PM
Last Updated : 30 Sep 2020 07:14 PM

டிச.31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

செப்.30-ம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டிய தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்னும் நடத்தி முடிக்கப்படாமல் உள்ளதால், மேலும் அவகாசம் கோரிய வழக்கில் டிச.31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்திட சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி அதிகாரியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

ஆனால், தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், ஜூலை 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால், கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலில் வந்தவுடன், ஊரடங்கைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி கடந்த மே மாதம் தயாரிப்பாளர் சங்கம் அவசர வழக்குத் தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து அறிக்கையை சிறப்பு அதிகாரி அக்டோபர் 30-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி செப். 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடக்கவில்லை. இந்நிலையில், நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த காலக்கெடுவுக்குள் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தி முடிக்கப்படாததால், தேர்தலை நடத்தி முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி பி.டி ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனக் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். மேலும், தேர்தல் அதிகாரியான ஒய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தேர்தலை நடத்தி முடித்தது குறித்த அறிக்கையை 2021 ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x