Last Updated : 09 Sep, 2015 08:36 AM

 

Published : 09 Sep 2015 08:36 AM
Last Updated : 09 Sep 2015 08:36 AM

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தென் மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு உதவுமா?- வேலையில்லா இளைஞர்கள் எதிர்பார்ப்பு

தமிழக அரசு நடத்தும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தென்மாவட்டங்களில் தொழிற் சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் இளைஞர்களும், தொழில்துறை யினரும் காத்திருக்கிறார்கள்.

தென்மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக தொழில் வளர்ச்சியின்மையால் ஜாதி மோதல்கள், கொலைகள் தொடர் கின்றன. போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் தென் மாவட்ட இளைஞர்கள் சென்னை, கோவை, மும்பை மற்றும் பெங்களுர் நோக்கி செல்கின்றனர்.

தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்கள், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே ஆலைகளை அமைக்கின்றன. பல்வேறு வகை யான மூலப்பொருட்கள் கிடைத்த போதும், தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி பலவீன மாகவே இருக்கிறது.

தென்மாவட்ட ஜாதிக் கலவரங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்த, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையிலான குழுவும், கன்னியாகுமரி மாவட் டத்தில் மத மோதல்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்த நீதிபதி வேணுகோபால் கமிஷனும், அதிக வேலைவாய்ப்பு இல்லாததே இவற்றுக்குக் காரணம் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகம் மூலம் தொடங்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் இதுவரை முழுஅளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை.

சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை யொட்டி இங்கு பல்வேறு தொழில் களைத் தொடங்க பல்வேறு நிறுவனங்களுடன், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

புதிய ஒப்பந்தங்கள்

திருநெல்வேலி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ஞானசேகரன் கூறியதாவது:

நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழில் முனைவோர்களுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப் படுகிறது. இங்கு ரூ.165 கோடியில் பல்வேறு தொழில்கள் தொடங்க சமீபத்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந் தங்களை அந்தந்த நிறுவனங் களுடன், மாவட்ட தொழில் மையம் செய்திருக்கிறது. திருநெல் வேலி மாவட்டத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்க தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

ரயில் இன்ஜின் ஆலை

நாங்குநேரி சிறப்பு பொருளா தார மண்டலத்தை, ரயில்வேக்கு என தனியாக சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றியமைத்து, அங்கு ரயில் இன்ஜின் தொழிற் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு களாக கிடப்பில் உள்ளது. இது குறித்து தென்மாவட்ட ரயில் பயணி கள் சங்க நிர்வாகி எட்வர்ட் ஜெனி கூறும்போது, `ரயில்வே துறையில் இன்ஜின் உற்பத்தி போதுமானதாக இல்லை. புதிய தொழிற்சாலைகள் நிறுவ வேண்டி யிருக்கிறது. நாங்குநேரியில் இன்ஜின் தொழிற்சாலை அமைக் கப்பட்டால் அதிக வேலைவாய்ப்பு உருவாகும்’ என்றார் அவர்.

கட்டமைப்பு தேவை

திருநெல்வேலி மாவட்ட தொழில் வர்த்தக கழக தலைவர் குணசிங் செல்லத்துரை: `முதலீட் டாளர்கள் மாநாட்டில் முதலீடு செய்யப்படும் தொகையில் 30 சதவீதத்தை தென்மாவட்டங்களில் முதலீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அளவி லான தொழிற்சாலை தென் மாவட்டத்துக்கு வருவதற்கான உரிய கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும். அதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என்றார் அவர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் உற்பத்தி அதிகமிருப்பதால் அதை சார்ந்த தொழிற்சாலைகள் தொடங்குவது, துறைமுக நகரான தூத்துக்குடியில் தொழில் வாய்ப்புகளை அதிகப்படுத்துவது, அந்தந்த பகுதிகளில் உற்பத்தி சார்ந்த மூதலீடுகளை ஈர்ப்பது என்றெல்லாம் பல்வேறு அம்சங் களையும் அரசு கவனத்தில் கொண்டு, தென்மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பது மக்களின் பெரும் எதிர்பார்ப்பு ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x