Published : 24 Sep 2020 07:38 AM
Last Updated : 24 Sep 2020 07:38 AM

சசிகலா சகோதரருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட்

தஞ்சாவூரைச் சேர்ந்த மனோகரன் என்பவருக்கு, தஞ்சாவூர் அம்மன்பேட்டை அருகே ஆற்காடு கிராமத்தில் உள்ள 4.84 ஏக்கர் தோட்டத்தைதனக்கு விற்குமாறு சசிகலாவின் சகோதரரும், தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் மிரட்டியுள்ளார்.

இதனால், அந்த நிலத்தை தஞ்சாவூரை சேர்ந்த முருகராஜ் என்பவருக்கு விற்க முடிவு செய்து ரூ.65 லட்சத்துக்கு விலை பேசி, அதில் ரூ.15 லட்சத்தை முன்தொகையாகப் பெற்றுக்கொண்டு அசல் பத்திரங்களையும் அவரிடம் மனோகரன் கொடுத்துள்ளார்.

இதையறிந்த சுந்தரவதனம் தரப்பினர், முருகராஜிடம் இருந்து பத்திரத்தை வாங்கிக்கொண்டு அந்த நிலத்தை தனக்கே விற்குமாறு மனோகரன், அவரது மனைவி வளர்மதி மற்றும் குடும்பத்தினரை 2008-ல் காரில் கடத்தி மிரட்டியுள்ளனர். இதையடுத்து, நிலத்தை சுந்தரவதனத்தின் பெயரில் தஞ்சாவூர் கரந்தை பதிவுத் துறை அலுவலகத்தில் பதிவு செய்த பிறகே அவர்களை விடுவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, 2015-ல் உயர் நீதிமன்ற கிளையில் மனோகரன் வழக்கு தொடுத்தார். திருவையாறு நீதிமன்றம் விசாரிக்கவும், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து 2019-ல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், நீதிமன்றம் ஆக.3-ல் சுந்தரவதனம், அவரது தரப்பினர் 10 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து. செப்.7-ல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சுந்தரவதனம் உட்பட 11 பேரும் தலைமறைவாக இருப்பதாக போலீஸார் கூறினர். இதையடுத்து வழக்கு அக்.10-க்கு தள்ளி வைக்கப்பட்டது. இத்தகவல் அறப்போர் இயக்கம் மூலம் ஊடகங்களுக்கு பரப்பப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x